குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு உடனடி மாற்று வீடு… ரூ.1 லட்சம் நிவாரணம் : முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பொதுமக்கள் அவரவர் வீடுகளில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இதனால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது
இந்த நிலையில், குடிசை மாற்று வாரியத்தினால் கட்டப்பட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு உடனடியாக மாற்று வீடு வழங்குவதுடன், ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993-ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன், என தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்