Breaking News

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை (டிச.13) முதல் 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும். இன்று காலை திருப்பத்தூர், தருமபுரியில் 17 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




வட இந்திய பகுதிகளில் நிலவும் உயரழுத்தத்தின் காரணமாக வறண்ட வாடைக்காற்றானது தென் தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இந்த வாடைக்காற்றின் காரணமாக டிசம்பர் 14,15 ஆகிய 2 நாட்களுக்கு தமிழகத்தில் குளிர் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் 

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளையும் (டிச.13), நாளை மறுதினமும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இதர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

15-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், 16-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

17-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 18-ம் தேதி ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

 
12-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
12-12-2025: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருக்கக்கூடும்.

13-12-2025 மற்றும் 14-12-2025: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (12-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (13-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும். இதனால் குளிர் அதிகரிக்கும். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback