Breaking News

சீமான் பிரபாகரனை சந்தித்து உண்மை, பயிற்சிகள் தரவில்லை,புகைப்படம் வழங்கவில்லை -விடுதலை புலிகள் அறிக்கை

அட்மின் மீடியா
0

சீமான் பிரபாகரனை சந்தித்து உண்மை, பயிற்சிகள் தரவில்லை,புகைப்படம் வழங்கவில்லை -விடுதலை புலிகள் அறிக்கை

எல்டிடிஇ அமைப்பின் பொறுப்பாளர் தமிழ்வேந்தன் என்பவர் பெயரில் அறிக்கை


அன்புக்கும் பெரு மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, புலம்பெயர் உறவுகளே, தமிழக உறவுகளே

கிட்டத்தட்ட 35 ஆண்டு காலமாக எமது ஈழ விடுதலைப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்து இலங்கை அரசோடு இணைந்து சர்வதேசத்தின் கூட்டு முயற்சியால் 2009 ம் ஆண்டின் இறுதியில் எமது விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டது. ஆயுதம் மௌனிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் தாயகம் நோக்கிய பயணத்தில் எமது அரசியல் வழி போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது 

சர்வதேச சக்திகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், பல தடைகளையும் தாண்டி எமது விடுதலை நோக்கிய பயணத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தாங்கள் அறிவிர்கள். எமது தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்தும் மாவீரர்களின் அர்ப்பணிப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்களிலிருந்தும் கட்டி எழுப்பப்பட்ட எமது தாயக விடுதலைப் பயணத்தில் நாங்கள் அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறோம். 

ஆனால் எமது தாயகம் நோக்கிய பயணத்தை சர்வதேச பூகோள அரசியல் நலன் கருதி சர்வதேச சக்திகளும், இலங்கை அரசும் திட்டமிட்ட வகையில் ஒருங்கிணைந்து நசுக்க முற்படுவதுடன், எமது போராட்ட வரலாற்றையும், ஈழத் தமிழ் மக்களுடைய கலாச்சார விழுமியங்களையும் இல்லாத தொழில்க்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள். பல காலகட்டங்களில் எமது அண்டை நாடான இந்தியாவோடும். தமிழகத் தமிழர்களோடும் பின்னி பிணைந்து ஈழத் தமிழர்கள் ஆகிய நாம் இன்று வரை பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

                    

பூகோள அரசியல் கண்ணோட்டத்தோடு விரும்பியோ, விரும்பாமலோ எமது அண்டை நாடான இந்தியாவை அன்று தொட்டு இன்று வரை நேசக்கரம் கூப்பி அனுசரித்து எமது போராட்டத்தின் நியாயங்களை வலியுறுத்தி வருகின்றோம். விடுதலைப் புலிகள் இயக்கமாகிய நாங்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் எமது இயக்கத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் எந்த நோக்கத்துக்காகவும் யாருக்காகவும் நாம் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். தனிநபர் சுயநலத்திற்காகவும், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகவும் எமது விடுதலைப் போராட்டத்தையும், தேசியத் தலைவரையும் முன்னிறுத்தி செய்யப்படுகின்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். 

ஈழத் தமிழ் மக்களின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது வேறு இந்திய தமிழர்களின் தமிழ்த் தேசியப் போராட்டம் என்பது வேறு என்பதையும், தமிழகத்தில் உள்ள திராவிட இயக்கங்களின் செயற்பாடுகளுக்கு எதிராக எதிர்ப்வினையாற்றவோ, அவர்களின் செயற்பாடுகளுக்கு கருத்து கூறவோ நாம் விரும்பவில்லை. இது எங்கள் தேசிய தலைவரின் நிலைப்பாடும் அல்ல என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

திரு சீமான் அவர்கள் தேசியத் தலைவர் அவர்களை சந்தித்தது உண்மை. ஆனால் புகைப்படங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும், பயிற்சிகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பதையும் அன்பார்ந்த மக்களுக்கு நாங்கள் தெளிவூட்ட விரும்புகின்றோம். இந்த சர்ச்சையான கருத்துக்கள் மிகவும் வேதனைக்குரிய விடயமாகும் நமது விடுதலைப் போராட்டத்தையும், மாவிரர்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் இழிவு படுத்துகின்ற கொச்சைப்படுத்துகின்ற செயல் என்பதையும் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். 

நாங்கள் இந்தியாவுக்கோ, தமிழக மக்களுக்கோ என்றும் எதிரானவர்கள் அல்ல மாறாக எமது விடுதலைப் போராட்டத்திற்கு பின்னால் திராவிட இயக்கங்களின் பங்களிப்பு மிகவும் உன்னதமானது எமது இயக்கமோ, ஈழத் தமிழ் மக்களோ அளவு கடந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளார்கள் என்பதையும், எமது போராட்டத்தின் ஆரம்ப காலகட்டங்களில் திராவிட இயக்கங்களின் பங்கு மிகவும் விலைமதிப்பற்ற தியாகம் நிறைந்த அர்ப்பணிப்புகளையும் நன்றி உணர்வோடு பற்றிக் கொள்ள விரும்புகிறோம். தேசியத் தலைவர் அவர்கள் திராவிட இயக்கங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்துள்ளார் என்பதையும் இந்த வேளையில் பதிவு செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்ளுகின்றோம்.

ஆகவே பொய்ப் பிரச்சாரங்களையும், பொய்யான புகைப்படங்களையும். பயன்படுத்தி எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், எமது தேசியத் தலைவரையும், விடுதலைக்கான பயணத்தையும் மழுங்கடிக்கும் நோக்கத்தோடு தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இடம்பெற்று வரும் மோசடிகள் எமக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்பதனையும், இன்று பலராலும் பேசப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளிப்படையாகத்தெரிவித்துக் கொள்கிறது.

                        

விடுதலைக்குப் புலிகளின் பெயராலோ, தேசியத் தலைவரின் பெயராலோ, தமிழ் தேசியம் என்ற பேரிலும் புலம்பெயர் தமிழர்களிடம் பணம் வசூலிக்கும் எந்தவிதமான நடவடிக்கைகளுக்கும் புலம்பெயர் தமிழர்கள் நிதி பங்களிப்பு வழங்க வேண்டாம் என்றும், இந்த செயற்பாடுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் பொறுப்பேற்காது என்பதையும் மிகவும் அன்புரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback