செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டால் உடல் மினுப்பு ஏற்படும் என சமூகவலைதளங்களில் வரும் செய்தியை நம்பி சாப்பிட்ட நபர் பலி....
திருப்பத்தூர் மாவட்டம், மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது நண்பர் நாட்றம்பள்ளி பச்சூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினம் இவர்கள் இருவரும் தனியார் கல்குவாரி ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் இருவரும் தங்களது செல்போனில் பேஸ்புக், வாட்ஸ் அப் சமூக வலைதளங்களில் வந்த தகவலை நம்பி, செங்காந்தள் பூ செடியின் கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என அந்த செய்தியினை உண்மை என நம்பி , செங்காந்தள் பூ செடியின் கிழங்கைச் சாப்பிட்டுள்ளனர்
இந்நிலையில், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அவர்கள் இருவருக்கும் வாந்தியும், தலைச்சுற்றலும் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உறவினர்கள் இருவரையும் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதில் லோகநாதன் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ரத்தினத்தின் உடல்நிலையும் மோசமானதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்காந்தல் செடியின் மலர் இலை வேர் , கிழங்கில் கோல்ச்சிசின் COLCICHINE எனும் மருந்து மூலப்பொருள் உள்ளது இது மருத்துவப் பிரிவுகளில் கீல் வாதம் , மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அளவிற்க்கு அதிகமாக உபயோகபடுத்தினால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை அறியாமல் சமூக வலைதளங்களில் வந்த மெசஜை நம்பி சுய மருத்துவம் எடுத்து உயிரை பறிகொடுத்துள்ளார்
பொதுவாக மருந்துகளை பொருத்த வரை டாக்டரின் ஆலோசனை பெற்றே மாத்திரை மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.இல்லையேல் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
மேலும் மருத்துவர் ஒருவருக்கு கொடுக்கும் மருந்தின் செயல்பாடு என்பது மருந்தின் அளவு, வயது, ஒருவரது எடை, கிருமியின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒருவருக்கு எவ்வளவு மாத்திரை கொடுக்க வேண்டும் எத்தனை நாட்களுக்கு அதை எடுத்துக்கொள்ள, பரிந்துரைக்க வேண்டும் என்பது டாக்டருக்கு மட்டுமே தெரியும்.
எனவே சமூக வலைதளங்களில் வரும் எந்த ஒரு மருத்துவ செய்திகளையும் நம்பாதீர்கள்
அதுபோல ஏதேனும் ஒரு செய்தி வந்தால் அந்த செய்திகளை யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்
நம் உறவுகள் மற்றும் நண்பர்களின் விலைமதிக்க முடியா உயிர்களை இழக்க கூடும்
Tags: தமிழக செய்திகள்