Breaking News

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்கக்கூடாது - காவல்துறையிடம் ஓபிஎஸ் மனு

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதிக்க கூடாது - ஆவடி காவல்துறை ஆணையருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு

  

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற் குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் எதிர்வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை.

இருப்பினும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம
நடைபெற்றது. அப்போது பொதுக் குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழக இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. 
 
கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 18-06-2022 அன்று அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு என்றும், இதுபோன்ற தருணத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும், அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது என்றும், இதே மண்டபத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பலமுறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டதாகவும், எனவே 'இடமில்லை' என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமா இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் (Agenda) நிர்ணயம் செய் கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

18-06-2022 அன்று தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனைச் சுட்டிக் காட்டி வருகிற 23-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும் அடுத்த கூட்டத்திற்கான இடம் மற்றும் நாள், நேரத்தை பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கு கடந்த 19ஆம் தேதி நான் கடிதம் எழுதியிருந்தேன். இந்தச் சூழலில் கழக சட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் பா.பெஞ்சமின், பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார்.
 
ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையால் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளபடியாலும், பெஞ்சமின் அவர்கள் பாதுகாப்பு கோரியிருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கழகத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதாலும் கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டும் என்று தங்களுடன் கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 




 

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback