பெரும் அதிர்ச்சி மூடநம்பிக்கையின் உச்சம் 6 மாத குழந்தை நரபலி......முழு விவரம்....
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, மல்லிபட்டினம் பகுதியை சார்ந்தவர் நசுருதீன் (வயது 32). இவரது மனைவி சாலிஹா (வயது 24). இவர்கள் இருவருக்கும் 5 வயதுடைய ராஜி முகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜிரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 6 மாத கைக்குழந்தை குழந்தை ஹாஜிரா தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவசரம் அவசரமாக அன்றே சடலத்தை அடக்கம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை ஹாஜரா நரபலி கொடுக்கப்பட்டதாக உறவினர்கள் மூலம் தகவல் அப்பகுதியில் பரவியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சேதுபாவாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் உட்பட அதிகாரிகள் தலைமையிலான குழு குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, சம்பவ இடத்தில் வைத்தே பிரேத பரிசோதனை செய்தது.பின்னர், காவல் துறையினர் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நசுருதீனின் சித்தி ஷர்மிளா பேகம் வயது 48 அவரது கணவர் அசாருதீன் வயது 51 வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு, கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக ஊருக்கு வந்துள்ளனர். ஊருக்கு வந்ததில் இருந்து அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
உடல்பிரச்சனைகள் தீர மாந்திரீகம் செய்பவர்களை அணுக முடிவெடுத்து புதுக்கோட்டை, கிருஷணாஜி பட்டினத்திலுள்ள கேரளாவைச் சேர்ந்த குறி சொல்லும் மாந்திரீகவாதியான முகமது சலீம் (48) என்பவரைச் சந்தித்து ஷர்மிளா பேகம் குறி கேட்டிருக்கிறார். அப்போது `கோழி, ஆடு போன்றவற்றை உயிர்பலி கொடுத்தால் உன் கணவர் உடல்நலம் குணமடைந்துவிடும்’ என முகமது சலீம் கூறியிருக்கிறார்.
ஷர்மிளாவும் வீட்டினை சுற்றி 20 க்கும் மேற்பட்ட கோழி மற்றும் ஆடுகளை பலிகொடுத்த போதும், கணவரின் உடல்நலம் மீண்டு வரவில்லை. இதனால் மீண்டும் மந்திரவாதி முகமது சலீமிடம் சென்று கேட்கையில்,
அப்போது முகமது சலீம் வீட்டில் உள்ள யாரயாவது நரபலி கொடுத்தால் பிரச்சினை சரியாகி விடும் என்றும், இதனையடுத்து, வீட்டிற்கு வந்த ஷர்மிளா பேகம், தனது அக்கா மகன் நசுருதீனின் 6 மாத கைக்குழந்தை ஹாஜராவை பலிகொடுக்க முடிவெடுத்துள்ளார்.
கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் பச்சிளம் குழந்தையை மந்திரவாதி கூறியபடி நரபலி கொடுத்துவிட்டு, குழந்தையின் உடலை இறால் வைக்கும் பிளாஸ்டிக் ஐஸ் பெட்டியில் தண்ணீர் ஊற்றி அமுக்கி வைத்து சென்றார் என்பதும் தெரியவந்துள்ளது.
விசாரணையின் முடிவில், ஷர்மிளா பேகம், அவரின் கணவர் அசாருதீன், கேரள போலி மந்திரவாதி முகமது சலீம் ஆகிய 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags: தமிழக செய்திகள்