18 வயதுக்கு குறைவானர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு – காவல்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
தமிழகத்தில் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும் தடை செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் கோவை மாவட்டம் நல்லாம்பாளையத்தை சேர்ந்த நந்தகுமாா் என்பவரது மகன் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனான இவன் தனது தந்தையுடைய வாகனத்தை நகர்ப்புறங்களில் உள்ள சாலையில் ஒட்டி சென்றுள்ளான்.
அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாநகர போக்குவரத்து காவல் துறையினர், சிறுவனை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவனுக்கு 13 வயது தான் என்பது தெரிய வந்தது.
இப்படி சிறுவர்கள் சாலையில் சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டி வருவதால் தான் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.அதனால் இந்த செயலில் ஈடுபட்ட சிறுவன் மீதும், அவனுக்கு வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த பெற்றோர் மீதும் மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெற்றோரிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கோவை மாநகரில் இத்தகைய விதிமீறல் செயல்களில் ஈடுபடும் சிறுவர்களது பெற்றோரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்