ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை
சாலை விரிவாக்கத்திற்கென ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நடவேண்டுமென உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.
சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்படுவது குறித்து விருதுநகரைச் சேர்ந்த ஆனந்த முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அம் மனு மீதான விசாரணையில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதற்கு பதிலாக நடப்பட்ட மரக் கன்றுகள் எண்ணிக்கை குறித்து வரும் நவம்பர் மாதம் 5ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை, மதுரை நெடுஞ்சாலைத் துறை இயக்குநர்களுக்கு உத்தரவிட்டனர்.
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்திற்காக ஒரு மரம் வெட்டினால் 10 மரக் கன்றுகளை நட வேண்டுமென தெரிவித்த நீதிபதிகள், அவ்வாறு செய்ய தவறினால் மரங்களை வெட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
Tags: தமிழக செய்திகள்