உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன், 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 149 ஊராட்சிகளை இணைக்கவும், திருவாரூர், திருவள்ளுர், சிதம்பரம் உள்ளிட்ட 41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள் மற்றும் 1 பேரூராட்சியை இணைக்கவும், பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைத்தும், தனித்தும் கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகளை அமைத்துருவாக்கவும், கிராம ஊராட்சிகளை இணைத்து மற்றும் தனியாகவும் ஏற்காடு, காளையார்கோவில், திருமயம் உள்ளிட்ட புதிதாக 25 பேரூராட்சிகளை அமைத்துருவாக்கவும், 29 கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளுடன் இணைக்கவும் உத்தேச முடிவினை மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்பட்டது. இந்த அரசாணைகளை அரசிதழில் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பான ஆட்சேபனைகளை 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இதன்படி, முதன்மை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமை செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை என்ற முகவரி அனுப்பலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் அனைத்தும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
Tags: தமிழக செய்திகள்
