பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை- கும்பகோணம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். டாஸ்மாக் பார் ஒப்பந்ததாரரான இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான கட்டை ராஜாவும் அவரது ஆட்களும், செந்தில்நாதனை கடத்திச் சென்று அதே பகுதியில் உள்ள மாடாக்குடி புதிய பாலம் அருகே வைத்து வெட்டிக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து செந்தில்நாதன் கொலை வழக்கில் கட்டை ராஜா உள்பட 5 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமர்வு மற்றும் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த செந்தில்நாதன் கொலை வழக்கில் இன்று நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தீர்ப்பு கூறினார். கொலை வழக்கில் முதல் குற்றவாளியான பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பை அளித்தார்.
மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2-வது குற்றவாளியான மாரியப்பன், 4-வது குற்றவாளியான மனோகரன் ஆகிய இருவரும் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்து விட்டனர். 3-வது குற்றவாளியான ஆறுமுகம், 5-வது குற்றவாளியான செல்வம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்