12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது
நாடு முழுவதும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல் கூடாது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் போராட்டம் நடக்கிறது
மத்திய தொழிற்சங்கங்கள், மாா்ச் 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாா்ச் 30-ஆம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தன.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும்,பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து சிஐடியூ,ஏஐடியூசி,யூடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, கட்சி சாா்ந்த தொழிற்சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.அதன்படி நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
இந்த பொது வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே,வேலை நிறுத்தம் நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்