ஹிஜாப் விவகாரம்..கர்நாடகா உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு..
ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரிது ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி ஆகியோர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.இந்த அமர்வு வழக்கை விசாரித்து வருகிறது. அதில் மாநிலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் எனவும் வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது என இடைக்கால உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். மேலும் வழக்கு விசாரணை பிப்.,14 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்க உள்ளதால் ஹிஜாப் பிரச்னை உருவான உடுப்பி மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளை சுற்றியும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட காவல்துறை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்துக்கு கூட்டம் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்