Breaking News

இன்று இரத்ததான நாள்

அட்மின் மீடியா
0
உயிர் காக்கும் இரத்த தானம் செய்வோம்
 


நமக்கு இருப்பதை இல்லாதார்க்கு கொடுத்து உதவும் செயலை தானம் என்று சொல்கிறோம். எந்த பிரதி உபகாரமும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு நாம் எதைக் கொடுத்தாலும் அது தானம்தான்.

ஒருவரது பசியைப் போக்குவது அன்னதானம். ஒருவருக்கு பார்வை கொடுப்பது கண் தானம். ஆனால் ஒருவருக்கு உயிரையேக் கொடுக்கலாம் ஒரு தானத்தின் மூலமாக. ஆனால் அதற்காக நாம் நமது உயிரைக் கொடுக்க வேண்டாம், ரத்தத்தைக் கொடுத்தால் போதும்.

ரத்தம் என்பது யாருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் தேவைப்படலாம்.  
விபத்து,

அறுவை சிகிச்சை,  

நோய் என எந்த காரணத்திற்காகவும் ரத்தம் தேவைப்படலாம்.  

அப்பொழுது ரத்த தானம் செலுத்த விரும்புபவரை தேடி அவரிடம் இருந்து ரத்தம் பெற்று நோயாளிக்கு செலுத்துவது என்பது இயலாத காரியம்.எனவே தான் ரத்த வங்கிகள் செயல்படத் துவங்கின.

அதாவது, ரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களிடம் இருந்து ரத்தத்தைப் பெற்று அதனை பாதுகாத்து, ரத்தம் தேவைப்படும்போது அதனை அவர்களுக்குக் கொடுத்து உதவும் ஒரு அமைப்புதான் ரத்த வங்கியாகும்.


யார் ரத்த தானம் செய்யலாம்?

18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ஆனால் ரத்த தானம் அளிக்க விரும்புவோரது உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


நல்ல ஆரோக்கியமாக இருக்கும் எந்த நபரும் ரத்த தானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால் நமது உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

3 மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே ரத்த தானம் செய்ய முடியும்.


சாதாரண எடையுள்ள ஒவ்வொரு மனித உடம்பிலும் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் இருக்கும். அதில் இருந்து வெறும் 300 முதல் 350 ‌மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே ரத்த தானத்தின் போது எடுக்கப்படும்.

தானமாக அளித்த ரத்த அளவை நமது உடல் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் உற்பத்தி செய்துவிடும்.

ரத்த தானத்தின் போது நாம் இழக்கும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 56 நாட்களிலேயே சீராகிவிடும்.

ரத்த தானம் அளிப்பதற்கு எந்தவிதமான உணவுக் கட்டுப்பாடோ, மருந்தோ தேவையில்லை.
ரத்த தானம் செய்வதால் என்ன நன்மை
மாரடைப்பு வருவது குறைகிறது.
புதிய ரத்த அணுக்கள் உருவாகின்றன.
ஒருமுறை ரத்த தானம் செய்வதால், 500 கலோரிக்கும் மேலாக எரிக்கப்படுகிறது.
உடலில் அதிகமாக  உள்ள இரும்புச்சத்து  வெளியேற்றப்படுகிறது.
ஒருமுறை ரத்த தானம் செய்வதன் மூலம் நான்கு உயிர்களைக் காப்பாற்ற இயலும்.
யார் ரத்ததானம் செய்யக்கூடாது?
ஒரு வார காலத்துக்குள் சளி, காய்ச்சல் இருப்பவர்கள்.
ஆறு மாதங்களுக்குள் பெரிய அளவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள். மற்றும் மூன்று மாதங்களுக்குள் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்.
மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், காய்ச்சல் குணமான மூன்று மாதம் வரையிலும் ரத்த தானம் செய்ய வேண்டாம்.
மஞ்சள்காமாலை சிகிச்சை முடிந்து ஒரு வருடத்துக்கு முன்னதாக செய்யக் கூடாது.
பால்வினை நோய், ஹெச்..வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர்.
மாதவிடாய்க் காலங்களிலும், கருவுற்றிருக்கும் போதும், தாய்ப்பாலூட்டும்போதும் பெண்கள் ரத்ததானம் செய்யக் கூடாது.
சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னைக்காக மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், ரத்த உறைதல் குறைபாடு உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
மது அருந்தியவர்கள்.
சமீபத்தில்  தடுப்பு ஊசி போட்டுக்கொண்டவர்கள்.

எனவே நம்மால் இயன்ற வரை இரத்த தானம் செய்வோம். இரத்த குறைபாடால்ஏற்படும் உயிரிழப்பை தவிர்ப்போம்.

போர் வீரன் எல்லையில் சிந்தும் ரத்தம்  நாட்டை காக்கும் 

மனிதாபிமானத்துடன்  நீ கொடுக்கும் ரத்தம்  ஓர் உயிரினை காக்கும்

Give Us Your Feedback